மத கலாசாரங்களை அழித்து வடக்கில் தீவிர பௌத்தமயமாக்கல் - வெடுக்குநாரி தொடர்பில் கடும் கண்டனம்!


வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாரி மலையிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த மூன்று வருடங்களாக வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாரி மலையிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பக்தர்கள் செல்வதையும், திருவிழாக்கள் செய்வதையும் தொல்பொருள் திணைக்களம் ஊடாக காவல்துறையினர் தடை விதித்திருந்தனர்.

கடந்த 2 வருடங்களுக்கு மேலாக இங்கு திருவிழா செய்ய முடியாமல் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியிருந்தது. அவ்வாறான நிலையில், மூன்று தினங்களுக்கு முன்பு வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் அனைத்து விக்கிரகங்களும் உடைத்து எறியப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கையானது படைத்தரப்பினரால் இடம் பெற்றுள்ளதாக அறிகின்றேன். தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் வெடுக்குநாரி மலையை பௌத்த மயமாக்கி, அங்கே விகாரை அமைப்பதற்காக அவர்கள் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு மேல் முயற்சி செய்து வந்தார்கள்.

குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். அதே போல் வடக்கு - கிழக்கில் இருக்கும் தமிழர்களின் மத கலாசார அடையாளங்களை அழித்து மிக தீவிரமாக பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தொல்பொருள் திணைக்களம் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் குறித்த செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டமைக்கு எதிராக, எதிர்வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து வவுனியா மாவட்டச் செயலகத்தை வந்தடைய உள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு, தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களம் பௌத்த மயமாக்கலுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” எனவும் அவர் தெரிவித்தார்.