யாழில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் - ஜூலையில் இருந்து விழிப்புணர்வு ஆரம்பம்...!

யாழ். மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் ஜூலை மாதம் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளினை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட  மருதலிங்கம் பிரதீபன் தெரிவிக்கையில், 

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தை கவனத்தில் கொண்டு இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரை (நேற்றுமுன்தினம்) 4ஆயிரத்து 729 பேர் யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது. முன்னைய வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த அரையாண்டில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

மக்களிடத்தே விழிப் புணர்வை ஏற்படுத்துவதுடன் மட்டு மல்லாது வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்களுடனும் கலந்துரையாடி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அனைத் துத் துறைசார் அதிகாரிகளும் ஒன்றி ணைந்து செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தமுடியும் என தெரிவித்துள்ளார். 

இதேவேளை, கிணறுகளில் காணப்படும் குடம்பிகளை கட்டுப்படுத்த குடம்பிகளை உண்ணும் மீன்களை கிணற்றுக்குள் விடுவித்தல், வீட்டுக் கழிவுகளை வீதிகளில் கொட்டுவதைக் கட்டுப்படுத்துதல், கழிவுகளை தரம் பிரித்து  கழிவுத் தொட்டிகளில் போடுவதை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.  பள்ளி மாணவர்கள் மட்டத்திலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்துதல். ஆகியவை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.