வைத்தியசாலைகளில் தொடரும் மரணங்கள்: ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை

 நாட்டில் அண்மைக்காலமாக சத்திரசிகிச்சையின் போது ஏற்படும் மரணங்கள் மயக்க மருந்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

கண் சத்திரசிகிச்சையின் போது நோயுற்ற பெண்ணொருவர் தேசிய கண் வைத்தியசாலையில் உயிரிழந்தமை, பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குழந்தை உயிரிழந்தமை போன்ற சம்பவங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சுகாதார நிர்வாகத்திற்கு நோயுற்றவர்களின் உயிருடன் விளையாடுவதற்கு தார்மீக உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் ஏற்படும் சாதாரண மரணங்கள் கூட தரக்குறைவான மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளால் ஏற்படுவதாக சமூகத்தில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் தற்போதைய சூழ்நிலையில் அந்த சந்தேகம் நியாயமாகி வருவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டிற்குள் வருவது, மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் மருந்துகளை ஆய்வுக்கூட பரிசோதனைகள் இன்றி வெளியிடுவது மற்றும் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் தரம் குறைந்தவை என சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டமை ஆகியன மக்கள் மனதில் பதியாமல் இல்லை.

இந்நிலையில் வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள சுகாதார அமைப்பு தொடர்பில் ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.