முள்ளிவாய்க்காலில் ரவிகரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வீரசிங்கம் ஆகிய இருவரிடமும் நேற்றைய தினம் (26.11.2023) முல்லைத்தீவு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இரட்டை வாய்க்கால் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையில் கார்த்திகைப்பூ , மாவீரர் நாள் என்ற பதம் இருப்பதாகவும், அதனை அகற்றுமாறும் நேற்றைய தினம் பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று முரண்பட்டிருந்தனர்.

இதன்போது பொது மக்களும், ஏற்பாட்டு குழுவினரும் அதனை அகற்ற முடியாதெனவும், அதற்கான விளக்கத்தையும் கூறியிருந்த நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு குற்றப்புலனாய்வுப்பிரிவினர் நேற்றைய தினம் மாலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து ஒரு மணித்தியாலமாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அந்த விசாரணையில் இரட்டை வாய்க்கால் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட கார்த்திகைப்பூ மற்றும் மாவீரர் நாள் என எழுதப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

நாம் நீதிமன்ற கட்டளைகளை மீறவில்லை. இனியும் மீறமாட்டோம். நவம்பர் 27 எழுச்சியாக இடம்பெறவிருக்கும் நாளினை பொலிஸார் திட்டமிட்டு குழப்ப வேண்டும் என விசாரணைக்கு அழைத்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால் நாங்கள் எமது உரிமையை , நினைவு நாளினை நினைவு கூருவோம். தேவிபுரம், மாத்தளன், அளம்பில், முள்ளியவளை, முல்லைத்தீவு கடற்கரை, முள்ளிவாய்க்கால் போன்ற பல பகுதிகளில் குழப்ப நிலை ஏற்படுத்தப்பட்டது.

அத்தோடு மஞ்சள், சிவப்பு கொடிகளையே கட்ட வேண்டாம் என்ற நிலை தான் காணப்பட்டது. பொலிஸார் தாங்கள் நினைத்தது போல் , தங்களுக்கு ஏற்றால் போல் குழப்ப வேண்டும் என்ற நோக்கத்திலே செயற்படுகின்றார்கள்.

முன் நின்று செய்பவர்களை பொலிஸ் நிலையம் அழைப்பதும், அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதும், இடையூறுகள் ஏற்படுத்துவதுமே இவர்களது நோக்கமாகும்.குழப்பநிலை எவ்வாறு இடம்பெற்றாலும் இறந்தவர்களது நாளினை நினைவு கூருவோம்.

அத்தோடு எமக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவுக்கு எதிராக இன்றைய தினம் (27.11.2023) காலை நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.