தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்: தம்பதியினர் வெட்டி படுகொலை

 வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று(30) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியைசேர்ந்த பசுபதி வர்ணகுலசிங்கம் வயது 72 என்ற முதியவரும், அவரது மனைவியான 68 வயதான கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், செட்டிகுளம் பிரதான வீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபாரநிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்றயதினம்(29) இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபாரநிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த தம்பதிகள் வியாபாரநிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வியாபாரநிலையத்தை திறப்பதற்காக வருகைதந்த மகன் தனது தாயும் தந்தையும் இரத்தவெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ளநிலையில் அவர்கள் வெட்டிக்கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர் குறித்த சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்கநகை ஒன்றும் காணாமல்போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் இன்று அதிகாலை திருட்டில் ஈடுபடும் போது இடம்பெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் செட்டிகுளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.