யாழில் கொரோனா தொற்று பரிசோதனைகள் - சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் ஆரம்பித்துள்ளநிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கொரோனா பரிசோதனைகளை மீள ஆரம்பிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, கொரோனாத் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம் என கொழும்பு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கும், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து யாழ் போதனா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ந்தும் இந்த சோதனைகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை யாழ் போதனா மருத்துவமனை கோரி இருந்தது.

இந்தநிலையில், கொரோனாத் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனையை முன்னெடுக்க வேண்டாம் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

அந்தவகையில், சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் கொரோனாத் தொற்றுக்குரிய அறிகுறிகளைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு வேறு நோய்கள் இனங்காணப்படாவிட்டால் மாத்திரமே கொரோனா பரிசோதனையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.