கோப்பாய் பொலிஸாருக்கு கத்தியை காண்பித்து மிரட்டல் - கைது செய்ய நடவடிக்கை!

வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கிறீஸ் கத்தியை காண்பித்து மிரட்டி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்ற இருவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – உரும்பிராய் சந்திக்கு அருகில் கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள், வீதி சோதனை கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பொலிஸார் வழிமறித்து சோதனை நடாத்த முற்பட்டனர்.இதன் போது தமது உடைமையில் மறைத்து வைத்திருந்த கிறீஸ் கத்தியை எடுத்து பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்து, அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

தப்பி சென்ற இருவரும் போதைப்பொருள் கடத்தல், அல்லது வேறு பாரிய குற்ற செயல்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.அதேவேளை இருவரும் கைவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளில் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், தப்பி சென்ற இருவரையும் கைது செய்வதற்கு உரியநடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.