யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! ஐவர் அதிரடியாக கைது, பெருமளவான இராணுவத்தினர் குவிப்பு

 யாழ்ப்பாணம்-தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் குறித்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணிக்குள் புதிதாக விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

 குறித்த விகாரையை அகற்ற கோரியும் அதனை சூழவுள்ள 14 குடும்பங்களுக்கு சொந்தமான சுமார் 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் நேற்;றைய தினம்  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர் செ கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் விகாரை முன்பாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

நேற்றைய தினம் இரவு அவ்விடத்தற்கு சென்ற பொலிஸார்  போராட்டக்காரர்களின் கொட்டகையை அங்கிருந்து பிடுங்கி , அகற்றியுள்ளனர்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இங்கிருந்து விலகி செல்ல வேண்டும் . இல்லையெனில் அனைவரையும் கைது செய்வோம் என கூறி பலரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதேவேளை வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி , போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வேறு எவரும் செல்ல முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

பொலிஸாரின் அச்சுறுத்தல்களை கணக்கில் கொள்ளாது கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கான உணவு , நீர் மற்றும் மருந்து ஆகியவற்றை வழங்கவும் பொலிஸார் அனுமதிக்கதாக நிலையில் சுமார் 7 மணி நேரத்தின் பின்னர் மனிதவுரிமை ஆணைக்குழு உள்ளிட்டவர்களின் அழுத்தங்கள் காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவிலையே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டது.

அதே நேரம் இன்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதியில் நின்ற பெண் உள்ளிட்ட ஐவரை எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இன்றி பலாலி பொலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் ,  மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள்

 பொலிஸாரின் தடைகளை மீறி உள்ளே சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களை சந்தித்தது தமது ஆதரவை தெரிவித்து கலந்துரையாடினார்கள்.

அதேநேரம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள் , வீதி தடை கம்பிகள் என்பவற்றை விகாரைக்கு அருகில் வீதிகளில் போட்டு , வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.  

அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு , கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது