யாழ். நகரில் ஒரு வழிப்பாதையாக உள்ள முக்கிய வீதிகள் - வடக்கு ஆளுநரின் அதிரடி

யாழ்ப்பாணம் (Jaffna) - சுகாதார நகர திட்டத்தின்' முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N.Vethanayahan) தலைமையில் இடம்பெற்றுள்ளது.


குறித்த கலந்தாய்வு நேற்றைய தினம் (06.01.2025)  ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.


இதன்போது, உலக சுகாதார நிறுவனத்தால் அடையாளப்படுத்தப்பட்ட விடயப் பரப்புக்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.


புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

ஒருவழிப்பாதை

பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்களின் பாவனையை மட்டுப்படுத்துவதன் தேவைப்பாடு ஆராயப்பட்டதுடன் யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள சில வீதிகளை ஒரு வழிப்பாதையாக்குவதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

யாழ். நகரில் ஒரு வழிப்பாதையாக உள்ள முக்கிய வீதிகள் - வடக்கு ஆளுநரின் அதிரடி | Consultation On The Progress Of Jaffna

இது தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஊடாக குழு அமைத்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளுமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

மேலும் யாழ். நகர மத்தியில் அமைந்துள்ள பேருந்துத் தரிப்பிடத்தின் ஊடாக எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் பல தரப்புக்களும் சுட்டிக்காட்டினர்.

பேருந்துத் தரிப்பிடத்தை இடமாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது என்பதைக் குறிப்பிட்ட ஆளுநர் இது தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபையினருடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திண்மகக் கழிவகற்றல் முக்கிய சவாலாக இருக்கின்றமை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் எரியூட்டி அமைப்பது தொடர்பில் திட்டம் முன்மொழியப்பட்டாலும் அதற்கான நிதி மூலம் மற்றும் பொருத்தமான இடத்தைக் கண்டறிவது தொடர்பில் தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுமாறு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

யாழ். நகரப் பகுதியிலுள்ள பூங்காக்களை மேம்படுத்துவது மற்றும் நீச்சல் தடாகத்துக்கு பொருத்தமான இடத்தைக் கண்டறிவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டு அடுத்த மாதம் மீண்டும் கலந்துரையாடல் நடத்துவதென இதன் போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.