போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் குழப்பம் : மறைமுக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க கட்டார் முஸ்தீபு


போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் குழப்பம் நீடித்து வரும் சூழலில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் பொருட்டு, தமது தூதுக்குழு நேற்று கெய்ரோ பயணித்ததாக மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பு கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், போர் நிறுத்தம் ஒன்றுக்கான முன்மொழிவை ஏற்பதாக தமது அமைப்பின் தலைவர் இஸ்மைல் ஹனியோ கட்டார் மற்றும் எகிப்திடம் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த முன்மொழிவு இஸ்ரேலிய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் ஆனால் உடன்பாடு ஒன்றை எட்டும் முயற்சியாக பேச்சுவார்த்தையாளர்களுடனான சந்திப்புக்கு இஸ்ரேல் தூதுக்குழு ஒன்றை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளது.

மறுபுறம் ரபாவில் தொடர்ந்து படை நடவடிக்கையை முன்னெடுக்க நெதயாகுவின் போர் கால அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அந்த அலுவலகம் கூறியது.


இதில் ஹமாஸ் ஏற்றுக்கொண்டிருக்கும் முன்மொழிவு எகிப்தினால் வழங்கப்பட்ட பலவீனமான ஒன்று என்றும் அதில் இஸ்ரேல் ஏற்காத கூறுகள் உள்ளடங்கி இருப்பதாகவும் இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஹமாஸ் அமைப்பு மூன்று கட்டங்களைக் கொண்ட போர் நிறுத்தம் ஒன்றுக்கே இணங்கி உள்ளது. ஒவ்வொன்று 42 நாட்களைக் கொண்டதான இந்த போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில் 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதோடு இரண்டாவது கட்டத்தில் எஞ்சிய பணயக்கைதிகளுக்கு பகரமாக இஸ்ரேல் காசாவில் இருந்து முழுமையாக வெளியேறவுள்ளது. மூன்றாவது கட்டத்தில் காசாவில் மூன்று தொடக்கம் ஐந்து ஆண்டுகள் கொண்ட மீள்கட்டமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்படும்.

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பில் பேசுவதற்கு ஹமாஸ் பிரதிநிதிகள் இன்றைக்குள் கெய்ரோ செல்லவிருந்ததாக பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட பலஸ்தீனர் தரப்பை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எட்டப்படும் எந்த ஒரு உடன்படிக்கையும் கடந்த நவம்பரில் பாதி எண்ணிக்கையான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட ஒரு வாரம் போர் நிறுத்தத்திற்கு பின்னரான முதலாவது போர் நிறுத்தமாக அமையும்.

ஆனால் அது தொடக்கம் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்று இன்றி பணயக்கைதிகளை விடுவிப்பதை ஹமாஸ் அமைப்பு மறுத்து வருவதோடு தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று தொடர்பில் மாத்திரமே பேச்சுவார்த்தை நடத்துவதாக இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.