திலீபனின் நினைவேந்தலில் இருதரப்பிற்கு இடையில் குழப்பம் - தீக்காயத்திற்குள்ளான நபர்!


யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலில் இருதரப்பிற்கு இடையில் குழப்பம் நிலை ஏற்பட்டுள்ளது.

நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து உடனடியாக நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு தீக்காயம் ஏற்பட்ட நபரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தியாகதீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் இன்றாகும். அந்த வகையில் இன்றைய நினைவேந்தல் நிகழ்வு இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு மாபெரும் எழுச்சியாக இடம்பெற்றுள்ளது.

மக்கள் பெரும் திரளாக திரண்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டனர்.

இன்றைய நிவேந்தல் நிகழ்வை மாபெரும் உணர்வெழுச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என  தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இவ்வாறான நிலையில் பெரும் திரளான மக்கள் நினைவேந்தல் திடலுக்கு வருகை தந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் உணர்வுபூர்வ அஞ்சலியை குழப்பும் செயற்பாடாக இருதரப்பினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.