ரணிலின் இந்திய விஜயத்தில் இலங்கைக்கு மேலும் பல சலுகைகள்

ரணிலின் இந்திய விஜயத்தின் போது இலங்கைக்கு மேலும் பல பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா தொகுதி கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது, “ அதிபர் ரணில் அடுத்த வாரம் இந்தியா செல்லவுள்ளார்.

பெருந்தோட்ட மற்றும் வடகிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

அந்த விஜயத்தின் போது எமது நாடு மேலும் பல பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ளும். இரு நாடுகளுக்குமான பல முக்கிய விஷயங்கள் அங்கு வெளிப்படையாகவும் பரவலாகவும் கலந்துரையாடப்படவுள்ளன.

இதற்கு எதிர்க்கட்சிகள் காத்திருக்க முடியாது. சஜித் பிரேமதாச இன்னும் அரசியலில் ஒரு குழந்தை. நடைமுறை அரசியல் பற்றி இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.