குடிபோதை சாரதியால் கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு..!

மொனராகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய தனமல்வில வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் எதிர் திசையில் இருந்து வந்த கெப் வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதியான 44 வயதான காவல்துறை உத்தியோகத்தர், அவரது 42 வயது மனைவி மற்றும் 70 வயதுடைய தந்தை ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டியில் பயணித்த 11 வயது சிறுவன் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.