இலங்கைக்கு வந்துள்ள போர்க்கப்பல் - அதிருப்தியில் இந்தியா!

சீன இராணுவத்துக்குச் சொந்தமான 'ஹாய் யாங் 24 ஹாவ்' என்ற போர்க்கப்பல் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்துக்கு வர இருப்பதாக வெளியான தகவல்களால் இந்தியா கவலை தெரிவித்திருந்தது.

இருந்தபோதிலும் சீன போர்க்கப்பல் நேற்று முன்தினம் (10)  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 வீரர்கள் இருப்பதாகவும், இந்த படைக்கு தளபதி ஜின் சின் தலைமை தாங்குவதாகவும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

"சிறிலங்காவில் சீன கப்பல் இருப்பதாகச் செய்திகளைப் பார்த்தேன். அது போர்க்கப்பலா இல்லையா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அதே சமயம் நாட்டின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் அரசாங்கம் கவனமாக கண்காணித்து, பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது என்பதை உறுதிபட தெரிவிக்கிறேன்"  என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார்.

கடந்த ஆண்டும் (2022) ஒகஸ்ட் மாதம் இந்தியாவின் கடும் எதிர்ப்பினை மீறி கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் உளவுக் கப்பல் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.