குரங்குகளை கொண்டு செல்ல அனுமதி கோரிய சீன நிறுவனம் - அம்பலமானது தகவல்

  


சீனாவில் உள்ள தமது நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் மிருகக்காட்சிசாலையில் கண்காட்சிக்காக இலங்கையில் இருந்து குரங்குகளை மாத்திரமே கோருவதாக சீனாவின் Zhejiang Wuyu கால்நடை வளர்ப்பு நிறுவனம் விவசாய அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

தமது நிறுவனம் சீனாவில் உள்ள பிரபல மிருகக்காட்சிசாலை நிறுவனம் எனவும், இலங்கையில் உள்ள பெருந்தொகையான குரங்குகளில் சிலவற்றை கொடுத்தால் அவற்றை தனது மிருகக்காட்சிசாலையில் காட்சிக்கு வைக்கலாம் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கினால் குரங்குகளை பிடித்து அழைத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனது நிறுவனம் பல்வேறு நாடுகளில் இருந்து வன விலங்குகளைப் பெற்று அவற்றை தனது உயிரியல் பூங்காக்களில் கண்காட்சிக்கு பயன்படுத்தியுள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், குறித்த நிறுவனம் ஒரே தடவையில் ஆயிரம் குரங்குகளை சீனாவிற்கு கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து ஒரு வருடத்திற்குள் ஒரு இலட்சம் குரங்குகளை தமது மிருகக்காட்சிசாலைகளுக்கு கொண்டு செல்ல முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டிற்கு வெளியே கொண்டு செல்வதற்கு முன்னர் விலங்குகளைப் பிடிப்பது, தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட சீன நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்த பேச்சாளர் கூறினார்.

இலங்கை அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தால், குரங்குகளை சீனாவுக்கு கொண்டு செல்வதற்கு சீன அரசாங்கத்தின் வனவிலங்கு நிறுவனத்தின் அனுமதிக்கு விண்ணப்பிப்பதாகவும், சீன நிறுவனம் விவசாய அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.