அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி

சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு விரைவான பதிலடியாக, பீஜிங் நேற்று அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்துள்ளது.


இதன் மூலம், உலகின் முதல் இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே வர்த்தகப் போரை இரு நாடுகளும் மீண்டும் புதுப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.


ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் கூடுதல் 10  சதவீத  வரி விதிப்பு நடைமுறை அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து சீன இறக்குமதிகள் மீதும் நேற்று அதிகாலை முதல் அமுலுக்கு வந்தது.


இது அமுலுக்கு வந்த சில நிமிடங்களில் சீனாவின் நிதி அமைச்சு, அமெரிக்க நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுக்கு  15  சதவீத மற்றும் மசகு எண்ணெய், விவசாய உபகரணங்கள் மற்றும் மேலும் சில பொருட்களுக்கு 10  சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது..


அமெரிக்க ஏற்றுமதிக்கான புதிய கட்டணங்கள் பெப்ரவரி 10 ஆம் திகதி தொடங்கும் என்றும் சீனாவின் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


அதேநேரம், அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்திற்கு எதிரான விசாரணையைத் தொடங்குவதாகவும் சீனா அறிவித்துள்ளது.


இதனிடையே, தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்காக டங்ஸ்டன், டெல்லூரியம், ருத்தேனியம் மற்றும் மற்றும் மாலிப்டினம்  ஆகிய தனிமப் பொருட்களின் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாக சீனாவின் வர்த்தக அமைச்சும் அதன் சுங்க நிர்வாகமும் தனித்தனியாக தெரிவித்துள்ளன.


தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கு முக்கியமான இத்தகைய அரிய தனிமங்களின் உலகளாவிய விநியோகத்தின் பெரும்பகுதியை சீனா கட்டுப்படுத்துகிறது.


ட்ரம்ப் திங்களன்று மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரிகளை கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைத்தார்.


ஆனால் சீனாவிற்கு அத்தகைய வரி நிவாரணம் எதனையும் அவர் அறிவிக்கவில்லை.


மேலும், இந்த வாரத்தின் பிற்பகுதி வரை ட்ரம்ப் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் பேச மாட்டார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.