சீனாவின் உதவி - நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சித் தகவல் - இலவசமாக வழங்கப்படவுள்ள எரிபொருள்

நாட்டில் விவசாயம் மற்றும் கடற்றொழிலுக்கான எரிபொருட்களுக்கு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டதன் காரணமாக அதனை நிவர்த்தி செய்வதற்கு சீனா தயாராகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய சீனா விவசாயிகளுக்கு குறிப்பிட்டளவு எரிபொருள்த் தொகையை இலவசமாக வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக எரிபொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக பல்வேறு துறைசார் செயற்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையாகவுள்ள எரிபொருளை வழங்குவதற்கு கடும் நெருக்கடி நிலவும் நிலையில், அவர்களுக்கான எரிபொருளை சீனா வழங்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தற்போது மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக கடற்தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், தமக்கான நிவாரணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அதேவேளை எரிபொருள் தட்டுப்பாட்டினால் சந்தைகளில் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது. அத்துடன் நெல் விவசாயிகளும் எரிபொருள் தட்டுப்பாட்டு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

எனினும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீனா இலங்கையின் விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 1 கோடியே 6 இலட்சம் லீற்றர் எரிபொருளை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் 75 இலட்சம் லீற்றர் எரிபொருள் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளன. குறித்த எரிபொருள் தொகை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த எரிபொருள் தொகையை நெற்பயிர்ச்செய்கையின் போது வழங்க முடியாத போதிலும் அதனை நெல் அறுவடையின் போது வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆகவே சீனாவால் வழங்கப்படும் எரிபொருளை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.