கனடாவில் அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி - குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலைவாய்ப்பு


கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை போக்க கனடா ஒரு முக்கிய நடவடிக்கையாக அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி (OWP) வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலை அனுமதி தகுதி விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மற்ற வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து கனடாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் இலங்கை தொழில் வல்லுநர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

OWP வைத்திருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள், கனடாவில் உள்ள எந்த ஒரு முதலாளிக்கும் எந்த வேலையையும் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பணி அனுமதி நீட்டிக்கப்படுவதாக, குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் சீன் ஃப்ரேசர் அறிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடும்ப உறுப்பினர்களுக்கான பணி அனுமதியை கனடா விரிவுபடுத்துகிறது.

2023ஆம் ஆண்டு முதல் முதன்மை விண்ணப்பதாரரின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் பிள்ளைகள் கனடாவில் பணிபுரியத் தகுதி பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இது கனடாவின் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து திறன் நிலைகளிலும் OWP வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி அனுமதி வழங்குவதன் மூலம் 200000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் கனடாவில் வேலைகளுக்கு தகுதி பெறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, OWP வைத்திருப்பவர் உயர் திறமையான தொழிலில் பணிபுரிந்திருந்தால், அவரது வாழ்க்கைத் துணைவர்கள் மட்டுமே வேலை பெற தகுதியுடையவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.