கனடா செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்: மீண்டும் நடைமுறைக்கு வருகிறது எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம்


கனடாவிற்கு எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் ஊடாக 3,200 பேரை உள்வாங்க கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்திற்கு சிறிது இடைவெளி விடப்பட்டிருந்த நிலையில், தற்போது, மீண்டும் அது துவக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் வாயிலாக அதிக அளவில் புலம்பெயர்வோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றாலும், அவை எல்லாம் பல்வேறு பிரிவுகளுக்கென தனித்தனியாக நடத்தப்பட்டன.

ஆனால், தற்போது மொத்தமாக அனைத்துத் துறையினருக்குமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது, சில பொருளாதார புலம்பெயர்தல் திட்டங்களின் மூலம் கனடாவின் தொழிலாளர் காலியிடங்களை நிரப்புவதற்காக, கனேடிய நிரந்தர குடியிருப்பு விண்ணப்பங்களை நிர்வகிப்பதற்காக கனேடிய அரசு பயன்படுத்தும் ஒரு அமைப்பாகும்.

எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டமானது, விண்ணப்பதாரர்களின் சுயவிவரங்களை (profiles) தரவரிசைப்படுத்தும், Comprehensive Ranking System (CRS) என்னும் புள்ளிகள் அடிப்படையிலான ஒரு திட்டத்தைப் பயன்படுத்துகிறது.

அதிக புள்ளிகள் பெறுவோர், விண்ணப்பிப்பதற்கான அழைப்பு ஒன்றைப் பெறுவார்கள் (ITA). அதைத் தொடர்ந்து அவர்கள் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்.

அடுத்ததாக, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் அலுவலர் ஒருவர் அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து முடிவெடுப்பார்.

அதைத் தொடர்ந்து, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கைரேகை முதலான விடயங்களைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்வதுடன், நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யலாம், அல்லது மேலதிக ஆவணங்களைக் கேட்கலாம்.

உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதென்றால், கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அதை உறுதி செய்யும் விதத்தில் Confirmation of Permanent Residence (COPR) என்னும் ஆவணத்தை ஒன்றை உங்களுக்கு வழங்கும்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிரந்தர வாழிட உரிம விண்ணப்பதாரர்கள் landing processஐ முடிக்கலாம். நீங்கள் கனடாவுக்கு வெளியில் இருந்தால், கனடாவில் குடியமர்வதற்கான முதல் படிகளைத் துவங்குவதற்காக, நுழைவுக்கு முந்தைய சேவைகளை (pre-arrival services) துவக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.