நாளொன்றிற்கு 30க்கும் அதிகமானோரை நாடு கடத்தும் கனடா..!


நாளொன்றிற்கு 30க்கும் மேலானோர் கனடாவில் நாடுகடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் அதிகமானோர் நாடுகடத்தப்பட்டுவருவதாக புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்பான Migrant Workers Alliance for Change அமைப்பு அதிர்ச்சியூட்டும் தகவலொன்றை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாடுகடத்தப்படுவதிலிருந்து கடைசி நேரத்தில் தப்பிய ஃபாத்துமா(29) என்ற இளம்பெண் தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

குறித்த பெண்மணி கனடாவில் கொரோனா காலகட்டத்தில் முன்னணியில் நின்று மக்களைக் காக்க போராடியதாக கூறப்படுகிறது.

ஆனாலும், ஜனவரி 7ஆம் திகதி அவர் தனது சொந்த நாடான உகாண்டாவுக்கு நாடுகடத்தப்படவேண்டும் என கனடா அரசால் அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

கனடா மக்களுக்காக கொரோனா காலகட்டத்தில் உழைத்த ஃபாத்துமாவுக்கு ஆதரவாக நிகழ்நிலை பத்திரம் ஒன்றில் பல்லாயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டனர்.

மேலும் ஊடகம் ஒன்றில் ஃபாத்துமாவின் கதை வெளியாக, சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக ஃபாத்துமாவுக்கு மனிதநேய அடிப்படையில் நிரந்தர குடியிருப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தன் மூன்று வயது மகளுக்கு தான் மட்டுமே ஆதரவு என்னும் நிலையில், தான் நாடுகடத்தப்பட்டால் மகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ என கலங்கிப்போயிருந்த ஃபாத்துமா, தற்போது நிரந்தர குடியிருப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

Migrant Workers Alliance for Change அமைப்பின் இயக்குநரான Syed Hussan கூறுகையில்,

"ஃபாத்துமாவுக்காக நிகழ்நிலை பத்திரம் ஒன்றில் பல்லாயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டதாலும், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்ததாலும், அவருடைய நாடுகடத்தல் நிறுத்தப்பட்டுவிட்டது.

ஆனால், கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் அதிகமானோர் நாடுகடத்தப்பட்டுவரும் நிலையில், அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் இதேபோல நடவடிக்கை எடுப்பது சாத்தியமா என்பது சந்தேகமே.

இதை முறைப்படுத்த நிலையான மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும்." என தெரிவித்தார்.