வெளிநாடொன்றில் கடவுச்சீட்டுக்கு பதிலாக நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்

பிரித்தானிய விமான நிலையத்தில் கடவுச்சீட்டுக்கு பதிலாக முகத்தை அடையாளம் காணும் தொழில் நுட்பம் மூலம், விரைவாக மக்களை பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவசரமான சூழலில் பிரித்தானியாவுக்கு வருவோருக்காக இந்த திட்டம் எல்லைப் பாதுகாப்புப் படையினால் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் மூலம், பிரித்தானியாவிற்கு வருவோருக்கு ஏற்படும் தாமதம் பதற்றம் முதலான பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவுஸ்திரேலியா, மற்றும் துபாயில், சுமார் 50 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விமான நிலையங்கள் வழியாக நாட்டுக்குள் நுழையும்போது, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலமாக அவர்கள் அடயாளம் காணப்படுகின்றனர்.

இந்நிலையில், குறித்த திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் நிலையில், மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய கடவுச்சீட்டுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டிய அவசியம் இருக்காது.

இது தொடர்பில், “பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் படை டைரக்டர் ஜெனரலான Phil Douglas, இத்திட்டம் மூலம், மக்களைக் குறித்த பல தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

அவர்கள் ஏற்கனவே பிரித்தானியாவுக்கு வந்துள்ளார்களா, அவர்கள் புலம்பெயர்தல் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களா, அவர்களின் இது தொடர்பான தகவல்கள் எதுவாக இருந்தாலும் நமது பாதுகாப்பு அமைப்பில் உள்ளனவா என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். ஆகவே, சிலருக்கு, விமானங்களில் ஏறமுடியாத நிலை உருவாகலாம்” என் கூறியுள்ளார்.