பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்

   


பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே மரணமடைந்தார். பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 82.

பீலே தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை 1958ஆம் ஆண்டு சுவீடனில் பெற்றார். அந்த தொடரின் அரையிறுதியில் ஹட்ரிக் கோல் அடித்து மிரட்டினார். அதன் பின்னர் 1962ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் காயமடைந்த பீலே, 1970ஆம் ஆண்டு நடந்த மூன்றாவது உலகக்கோப்பையை தனது கைகளில் பெற்றார்.அத்துடன் 4 கோல்கள் அடித்து தங்கப்பந்து விருதையும் வென்றார்.

பிபா உலகக்கோப்பைகளில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற சாதனையைப் படைத்து, கின்னஸ் புத்தகத்தில் பீலே இடம்பெற்றிருந்தார். தனது 16வது வயதில் பிரேசில் அணியில் களமிறங்கிய பீலே, 1971ஆம் ஆண்டு வரை தன் நாட்டிற்காக விளையாடினார்.

அண்மையில், பீலே மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக, அவரது மகள் கெல்லி நஸிமென்டோ தெரிவித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பீலே உயிரிழந்தார்.

இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.