கச்சதீவு விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுகின்றது - மு.க.ஸ்டாலின்!


கச்சதீவு விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

திட்டமிட்டே தேர்தல் காலத்தில் வதந்திகளை பரப்பி, தமிழ்நாட்டில் அரசியல் இலாபம் பெற பாரதிய ஜனதா கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற விழா ஒன்றின் போது, பிரதமர் மோடி முன்னிலையில், கச்சதீவை மீட்டுத்தர வேண்டும் என முதலமைச்சர் என்ற வகையில் தான் கோரிக்கை விடுத்ததாகவும், 10 ஆண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேநேரம் கச்சதீவை மீளப் பெறுவது தொடர்பில் இந்தியாவில் கருத்தாடல் இடம் பெறவில்லை. கச்சதீவுப் பிரச்சினை இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னரே தீர்க்கப்பட்டுவிட்டது. அது பற்றி தற்போது மீண்டும் கலந்துரையாடல் அவசியமில்லை இவ்வாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.