மூன்று இளம் பிக்குமாரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கொருவர் கைது


நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த மூன்று இளம் பிக்குகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அங்கு வசித்து வந்த பிக்கு ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிக்கு நேற்று நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சந்தேகத்திற்குரிய பிக்குவை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் மூவரையும், குறித்த விகாரையில் தங்கியிருக்கும் ஏனைய பிக்குகளையும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரிடம் ஒப்படைத்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் நீதவான் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாவலப்பிட்டி கினிகத்தேன பிரதான வீதியில் அமைந்துள்ள விகாரையில் வசிக்கும் புதிய பிக்குகள் மூவர் சந்தேகத்திற்குரிய பிக்குவினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு செய்த முறைப்பாட்டிற்கு நாவலப்பிட்டி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.