மட்டக்களப்பை உலுக்கிய மினிசூறாவளி: 15 வீடுகளுக்கு சேதம்

மட்டக்களப்பு-போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளி தாக்கியதில் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கில் நேற்றிலிருந்து சீரற்ற காலநிலை நிலவுவதால் கடும் காற்றுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையும் பெய்து வருகின்றது.

இந்நிலையில், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் இன்று(27) காலை மினிசூறாவளி தாக்கியதில் பல வீடுகள் சேதமமைடந்துள்ளன.

அத்தோடு, சேதமடைந்த வீடுகளின் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சூறாவளி காரணமாக பயன்தரு மரங்களும் விழுந்துள்ளதுடன் சில இடங்களில் வீதிகளிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன் பாதிப்புகள் குறித்தும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.