பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என பசில் மீண்டும் வலியுறுத்து..!



பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்று சந்தித்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முனைப்பு காட்டி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பசில் ராஜபக்ச சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

பொதுஜன முன்னணியின் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதனை விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்நோக்க ஆயத்தமாகுமாறு பசில் ராஜபக்ச கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.