ரணில் -பசில் அணிக்குள் கடும் மோதல் - தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்


பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார் என பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என ஜனாதிபதி சூசகமாகத் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வந்தாலும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன என்ற ரீதியில் நிச்சயமாக ஆதரவு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சரும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமானவர் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவே என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர வாசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அரசாங்க பொறுப்புகளை வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விசுவாசமானவர்கள் எனவும், மற்றுமொரு பலமான குழுவினர் பசில் ராஜபக்சவிற்கு விசுவாசமானவர்கள் எனவும் உள்ளக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பண்டிகை காலத்தின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் புதிய தலைமை இணையும் என பசில் ராஜபக்சவின் விசுவாசியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.