அமெரிக்காவில் இந்திய குழு இயக்கிய கப்பல் பாலத்தில் மோத யார் காரணம்? கப்பல் நிறுவனம் தகவல்


அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ஃபிரான்சிஸ் கீ பாலம் இடிந்த சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.


நேற்று மாலை தேடல், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட டாலி எனும் கப்பல், நேற்று அதிகாலை மின்சாரம் இன்றி செயலிழந்ததால் அந்தப் பாலத்தின் மீது மோதியதாகக் கூறப்பட்டது.

இச்சம்பவத்தில் சிலர் ஆற்று நீரில் மூழ்கினர். சில வாகனங்களும் மூழ்கியதாகத் தெரிய வருகிறது.

ஆறு பேரைக் காணாத நிலையில், அவர்கள் கப்பல் மோதியபோது பாலத்தில் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

“நீண்ட நேரம் தேடியும் அவர்களைக் காணவில்லை. ஆற்று நீரின் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டால் காணாமற்போன ஆறு பேரில் யாரையும் உயிருடன் மீட்கும் நம்பிக்கை இல்லை,” என்று கரையோரக் காவற்படை தெரிவித்துள்ளது.

முன்னதாக, படாப்ஸ்கோ ஆற்றிலிருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.

பால்டிமோர் பாலம் 1977ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் மறுகட்டுமானத்திற்கான செலவை அமெரிக்க மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.

துறைமுகத்திலிருந்து வெளியேறும்போது டாலி கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததாக அதிலிருந்த சிப்பந்திகள் மேரிலேண்ட் அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மோதுவதற்குச் சில கணங்கள் முன்னால் கப்பல் சிப்பந்திகள் உதவிகேட்டு விடுத்த அழைப்பினால் அதிகாரிகள் வீதி போக்குவரத்தை நிறுத்தினர். அதனால் பல உயிர்களைக் காப்பாற்ற முடிந்ததாக மேரிலேண்ட் மாநில ஆளுநர் வெஸ் மோர் கூறினார்.

கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குரூப் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  
 
மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களுமே இதற்கு பொறுப்பானவர்கள். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கே, எவ்வித மாசும் ஏற்படவில்லை. சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.
 
மேலும், இந்த கப்பலில் 22 பணியாளர்கள் உள்ளனர் என்றும் அனைவரும் இந்தியர்கள் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
 
 
இதேபோல் சினெர்ஜி மரைன் குழுமத்தின் செய்தி அதிகாரி பகிர்ந்துள்ள தகவலில், "மோதல் காரணமாக பணியாளர்களில் ஒருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது, சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக பணியாளர்கள் குழுவினரிடம் ஃபெடரல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 22 பணியாளர்களில் 16 பேருடன் அவர்களின் குடும்பத்தினர் தொடர்புகொள்ள முடிந்தது.
 
விபத்து குறித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் குழுவினருடன் பேச முடியாத நிலை உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.