பதுளை பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவன் தப்பியோட்டம்

பதுளை (Badulla) – துன்ஹிந்த பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (02.11.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஜா - எல அலெக்சாண்டர் மாவத்தை பகுதியை சேர்நத 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்துச் சம்பவமானது, கடந்த முதலாம் திகதி பதுளை - துன்ஹிந்த, அம்பகஹஓய 5ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்றது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

அந்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்த நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.