இலங்கையில் ஒட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு நாட்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 93 குழந்தைகளில் ஒருவருக்கு ஒட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் ஸ்வர்ணா விஜேதுங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் 93 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த நிலை இருப்பது கண்டறியப்பட்டது.
இலங்கையில் இந்நிலையை எதிர்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நாங்கள் உணர்கிறோம். அதை விரைவாக அடையாளம் காண்பது முக்கியம்.
ஆரம்ப நிலையிலேயே இதை நாம் அடையாளம் காண முடிந்தால், இரண்டரை முதல் ஐந்து வயதிற்குள் இதனை குணப்படுத்த முடியும் என ஸ்வர்ணா விஜேதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய சமூக வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவாமாலகே, ஒட்டிசம் மற்றும் நரம்பியல் கோளாறுகள் உள்ள குழந்தைகளை அடையாளம் காண பெற்றோரின் பங்களிப்பும் அவசியம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒட்டிசம் என்பது, வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படக்கூடிய சிறிய மாற்றமாகும். குழந்தைகளின் மூளையானது, முதல் ஐந்து வருடக் காலப்பகுதியிலேயே, 80 சதவீதம் வளர்ச்சி அடைகின்றது.
அதனால், அந்த வயதுக் காலத்திலேயே இந்நோய் அறிகுறியைக் கண்டறிந்தால், அவர்களை அந்நிலைமையிலிருந்து மாற்றிக்கொள்வது இலகுவானது.