பிரித்தானியாவிற்கு செல்வோரிற்கு மாற்றிடம்! ரிஷி சுனக்கின் திட்டத்திற்கு அனுமதி

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்தும் மசோதா பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரின் புகலிடக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்கள் ஏதாவது ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்பி அங்கு தங்கவைப்பதுதான் ருவாண்டா திட்டமாகும்.

ஆனால் இந்தத் திட்டத்தின் படி ருவண்டாவிற்கு அனுப்பி வைக்கப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள் அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவர்கள் ருவண்டாவிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்குத்தான் வாழ அனுமதிக்கப்படுவார்களேயன்றி அவர்கள் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதே தற்போது அனைவருக்கும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

 பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக புலம்பெயர எண்ணும் வெளிநாட்டவர்களைத் தடுப்பதற்காவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்துவது தொடர்பாக சட்டம் ஒன்றைக் கொண்டுவர ரிஷி சுனக் தலைமையிலான பிரித்தானிய அரசு கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், இந்தத் திட்டம் தொடர்பான மசோதா ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கீழவை முன் நேற்று முன்வைக்கப்பட்டது.

அந்த மசோதாவை எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்த்துவந்த போதும் வாக்கெடுப்பின் போது, அந்த மசோதாவுக்கு ஆதரவாக 313 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க, மசோதா வெற்றி பெற்றுவிட்டது.

இது பிரதமர் ரிஷிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்பட்டாலும், பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஒரு மசோதா சட்டமாக்கப்படவேண்டுமானால், அது ஏழு படிகளைத் தாண்டி வரவேண்டும். இதுவரையில் முதல் படியில் மாத்திரமே ரிஷி சுனக் வெற்றிபெற்றுள்ளார்,

இந்நிலையில், இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்றால் பிரதமர் இதில் சில சட்டத்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் இல்லையேல், அடுத்தடுத்த கட்டங்களில் அவரது மசோதா தோற்கடிக்கப்படும் என உறுப்பினர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.