தமிழர் பகுதியில் கருங்காலி மரக்குற்றிகளுடன் இருவர் கைது

திருகோணமலை - ஹொரவ்பொத்தானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கருங்காலி மரக்குற்றிகளை மறைமுகமாக கொண்டு சென்ற சந்தேக நபர்களை இன்று(2) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹொரவ்பொத்தானை பரங்கியாவாடி பகுதியில் இருந்து காலி மாவட்டத்திற்கு லொறியில் கருங்காலி மரக்குற்றிகளை சிலர் ஏற்றி செல்வதாக போக்குவரத்து காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த  வாகனத்தை சோதனையிட்ட போது கோழியின் மல மச்சங்களுக்கு கீழாக கருங்காலி குற்றிகளை மறைத்து கொண்டு சென்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கஹடகஸ்திகிலிய- மஹாகுபுக்வெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சாரதியும் 49 வயதுடைய உதவியாளருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

இச்சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரையும்  கெப்பித்திகொள்ளால நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.