அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, முதல் வேலையாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பிற நாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், அவர்கள் கைகள், கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு அனுப்பப்பட்டதன் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நாடு கடத்தப்படுவதற்காக விமானத்தில் ஏற தயாராக இருக்கும் சட்டவிரோத குடியேறிகளுக்கான வீடியோவை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
சில வினாடிகள் மாத்திரமே கொண்ட இந்த வீடியோவில், ஒரு அதிகாரி சங்கிலியால் கட்டப்பட்ட மனிதர்களை விமானத்தில் ஏற தயார்படுத்தும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தொழிலதிபர்கள் சிலர் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
---
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பால் நாடுகடத்தப்பட்ட இந்திய, இலங்கையர்கள் உட்பட 300 பேர் பனாமா நாட்டில் ஹொட்டல் ஒன்றில் இருந்து உதவி கேட்டு கெஞ்சும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் பனாமா நாடுகளிடையே முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் சட்டவிரோத புலம்பெயர் மக்கள் தற்போது பனாமாவில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பனாமாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த புலம்பெயர்ந்தோர் பனாமாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இடம்பெயர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹொட்டல் ஒன்றில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், அந்தந்த நாடுகள் தங்கள் மக்களை சொந்த நாடுகளுக்குத் திரும்ப ஏற்பாடு செய்யும் வரை அவர்கள் ஹொட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.
மட்டுமின்றி, இந்த புலம்பெயர்ந்தோரில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தாயகத்திற்குத் திரும்ப விரும்பவில்லை என்ற சிக்கலும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிலர் தங்கள் ஹொட்டல் அறை ஜன்னல்களில் உதவி கேட்டு, எங்கள் நாட்டு நிர்வாகத்தால் நாங்கள் காப்பாற்றப்படவில்லை என்று கூறி, பதாகைகளைக் காட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனிநபர்களை நேரடியாக சில நாடுகளுக்கு நாடு கடத்துவதில் உள்ள சிரமங்கள் காரணமாக, நாடுகடத்தப்படுபவர்களுக்கான போக்குவரத்து நாடாக அமெரிக்கா பனாமாவைப் பயன்படுத்தி வருகிறது.
கோஸ்டாரிகாவும் புதன்கிழமை முதல் இதேபோன்ற நாடுகடத்தப்பட்டவர்களை அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ட்ரம்பால் நாடுகடத்தப்பட்ட 299 பேரில் 171 பேர்கள் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு மற்றும் ஐ.நா. அகதிகள் அமைப்பின் உதவியுடன் அந்தந்த நாடுகளுக்குத் திரும்ப ஒப்புக்கொண்டுள்ளதாக பனாமாவின் பாதுகாப்பு அமைச்சர் பிராங்க் அப்ரேகோ தெளிவுபடுத்தியுள்ளார்.
இருப்பினும், மீதமுள்ள 128 புலம்பெயர்ந்தோர் தொடர்பில் முறையான தகவல் ஏதும் வெளியாகவில்லை. மேலும் மூன்றாம் நாடுகளில் அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே கூறப்படுகிறது.