தென்னிலங்கையில் கோர விபத்து: தாயும் மகளும் உயிரிழப்பு

காலி- கரந்தெனிய பிரதேசத்தில் கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கோர விபத்து இன்று (04.07.2023) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விடுமுறை நாட்களில் மலையகத்துக்குச் சுற்றுலா சென்றுவிட்டு கரந்தெனிய பிரதேசத்திலுள்ள வீட்டுக்குக் காரில் வந்துகொண்டிருந்த குடும்பமே வீட்டுக்கு 500 மீற்றர் தொலைவில் விபத்தில் சிக்கியுள்ளது.

பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த கனரக வாகனம் காருடன் மோதியதில் அதில் இருந்த 38 வயதுடைய தாயும், 13 வயதுடைய மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

காரைச் செலுத்தி வந்த 42 வயதுடைய தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.