கண்டியில் நேற்றைய தினம் கொடூரமாக கொல்லப்பட்ட இளம் பெண்! பொலிஸாரின் விசாரணையில் வெளியான தகவல்


கண்டியில் நேற்றைய தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று (07) தனது முன்பள்ளிக்குச் சென்ற இருபத்தைந்து வயதுடைய முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 

இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முருதலாவ பிரதேசத்தை சேர்ந்த அஞ்சலி சாபா செனவிரத்ன என்ற முன்பள்ளி ஆசிரியை ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருந்தார். 

இலுகென்ன பிரதேசத்திலுள்ள முன்பள்ளிக்கு தனது வீட்டிலிருந்து சென்று கொண்டிருந்த இந்த ஆசிரியையின் கழுத்தை, கினிஹேன மயானத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

வெட்டுக்காயத்துடன் 100 மீற்றர் தூரத்திலுள்ள தனது அத்தையின் வீட்டுக்கு சென்று தன்னைக் காப்பாற்றுமாறு ஆசிரியை கூறியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஆசிரியையின் வீட்டில் இருந்து 700 மீற்றர் தொலைவிலேயே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முன்பள்ளி ஆசிரியை வீட்டிலிருந்து புறப்படும்போது யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளதுடன், அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்து தரவுகளை பெற்று சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவரின் கழுத்துப் பகுதியில் பலத்த காயங்களுடன் இலுக்தென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இது காதல் தொடர்பின் அடிப்படையில் நடந்த படுகொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.