இரண்டரை வயது ஆண் பிள்ளையொன்று மலசல கூட குழியில் வீழ்ந்து பரிதாபகரமாக மரணம்!

இரண்டரை வயது ஆண் பிள்ளையொன்று மலசல கூட குழியில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சோக சம்பமொன்று அம்பாறை – அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் நேற்று மாலை பதிவாகியுள்ளது.

உயிரிழந்த பிள்ளையின் தந்தை வெளிநாடொன்றில் தொழில் புரிந்துவரும் நிலையில் இரு பிள்ளைகளின் தாயும் உயிரிழந்த பிள்ளையும் அயலில் உள்ள உறவினர் வீடொன்று வழமைபோன்று சென்றுள்ளனர்.அங்கு அப்பிள்ளையின் தாயார் உறவினர்களுடன் இணைந்து சிறு வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் யாரும் அவதானிக்காத சந்தர்ப்பத்தில் பிள்ளை வெளியேறியுள்ளது.

வெளியேறிய பிள்ளை அருகில் இருந்த வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்ட மலசல கூட குழியில் வீழ்ந்துள்ளது.சில நிமிடங்களில் பிள்ளையினை காணாத தாயும் உறவினர்களும் தேடியபோது மலசல கூட குழியில் இருந்து பிள்ளையை எடுத்து வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் பிள்ளை உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்படும் இதுபோன்ற குழிகள் மூடப்படுவது மிக முக்கியம் என்பதை இச்சம்பவங்கள் உணர்த்தியுள்ளது.