கனடாவில் தமிழ் இளைஞரை சுட்டுக்கொன்ற தமிழர் - நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு


கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மற்றுமொரு தமிழர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனடாவின் ஸ்கார்ப்ரோ பகுதியை சேர்ந்த 25 வயதான சாரங்கன் சந்திரகாந்தன் கடந்த 2019 ம் ஆண்டு செப்டெம்பர் 19 ஆம் திகதி சுட்டு கொல்லப்பட்டார்.

மெக்கோவன் வீதிக்கு கிழக்கே, மிடில்பீல்ட் வீதிக்கு அருகில் உள்ள மெக்னிகோல் அவென்யூவில் உள்ள வணிக வளாகத்தில் வைத்து இரவு நேரத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் சாரங்கன் சந்திரகாந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவசர உதவி குழுக்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தின் போது மற்றொரு நபர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தி இருந்தனர்.

எனினும் அந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இச் சம்பவம் தொடர்பில் ஸ்டௌப்வில்லே பகுதியை நேர்ந்த 22 வயதான சரண்ராஜ் சிவகுமார் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் சாரங்கன் சந்திகாந்தன் சுட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியாக சரண்ராஜ் சிவக்குமார் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி குற்றவாளிக்கான தண்டனை எதிர்வரும் ஜனவரி 19 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.