கனடா பிரதமரிடம் வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்

பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு கனடா பிரதமர் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டுமென வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இன்றையதினம் (01.08.2023) அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தெரிவிக்கையில், தமிழர் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்குமாறு கனேடிய பிரதமருக்கு நாம் கடிதம் அனுப்பியுள்ளோம். தமிழர்களுக்கு உண்மையில் நடந்தது இனப்படுகொலை என்ற பிரதமர் ட்ரூடோவின் அறிக்கைக்காக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை தனது அமைச்சரவையில் பயன்படுத்தியதற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர்கள் புத்திசாலித்தனமான மற்றும் உறுதியான மக்கள், ஆனால் இலங்கையில் தமிழர்கள் அடிமைப் பொருளாதாரத்தில் வாழ்கின்றனர். தமிழர்களுக்கான உரிமம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதை மட்டுப்படுத்தி நாம் என்ன மாதிரியான வேலை செய்ய வேண்டும் என்பதை சிங்களவர்களே முடிவு செய்வார்கள்.

எனவே இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழர் இறையாண்மை கொண்ட தாயகம் எமக்கு வேண்டும். இதற்காக எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொது வாக்கெடுப்பை ஐ.நா நாடத்தி அவதானிக்க வேண்டும்.

பிரதமர் ட்ரூடோ உலகில் எங்களுக்காக பொது வாக்கெடுப்புக்கு வாதிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேற்குலகத் தலைவர்கள் மத்தியில் தமிழர்களுக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் முதல் தலைவராக பிரதமர் ட்ரூடோ இருக்க வேண்டும்.

முழுத் தமிழர் தாயகமும் சிங்கள ஆக்கிரமிப்பின் மூலம், சிங்கள ஆதிக்கப் பிரதேசமாக மாறுவதற்கு முன்னர், பிரதமர் ட்ரூடோ தாமதமின்றி விரைவில் ஒரு வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பார் என நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.