மாணவி டில்ஷியின் மரணத்திற்கு நீதி கோரி கொழும்பில் வெடித்த போராட்டம் - பெரும்திரளானோர் பங்கேற்பு

மாணவி டில்ஷியின் மரணத்திற்கு நீதி கோரி கொழும்பில் வெடித்த போராட்டம் - பெரும்திரளானோர் பங்கேற்பு 


கொழும்பு - கொட்டாஞ்சேனை பதினாறு வயதுடைய பாடசாலை மாணவி டில்ஷி அம்ஷிகாவின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து கொழும்பில் இன்று காலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் பெற்றோர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது.

 இந்த போராட்டதால் டுப்ளிகேஷன் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 போராட்டக்காரர்களால் பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 இதேவேளை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தர் மேட்டு சந்தியில்  இன்றுகாலை மற்றொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து  உயிரிழந்த மாணவி பயின்ற கல்வி நிலையத்திற்கு பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் அங்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதன்பின் கொட்டாஞ்சேனை கல்பொத்தானையில் அமைந்துள்ள உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு பேரணியாக சென்று அவ் விடத்திற்கு முன் நின்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அத்தோடு இச் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பபட்ட அனைவருக்கும் தகவல்களை தெரிவிப்பதாக போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் கருத்து தெரிவித்தனர்.
 
இறுதியாக இறந்த மாணவிக்கு தத்தமது சமய அனுட்டானங்களின் படி ஆத்ம சாந்தி பிரார்த்தனையை போராட்டக்காரர்கள் நிகழ்த்தினர்.  

அத்தோடு பேராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிஸாரும் குவிக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.