புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது : பெறுமதியான பொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞனை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் நேற்று (28) கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் கைவேலி பகுதியினைச் சேர்ந்த 29 வயதையுடைய போதைக்கு அடிமையானவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் இவரால் களவாடப்பட்ட 16 எரிவாயு சிலிண்டர்கள், ஒரு தண்ணீர் மோட்டார், ஒரு மிதிவண்டி, வயர் வடங்கள், கதிரைகள், தங்கசங்கிலி உள்ளிட்ட பெருமளவான பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

போதைக்கு அடிமையான குறித்த இளைஞன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனிமையில் வசிக்கும் வயோதிபர்களின் வீடுகளுக்கு சென்று அங்கு காணப்படும் எரிவாயு சிலிண்டர்களை களவாடுவதுடன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை திருடப்பட்ட பொருட்களை விற்று போதைப் பொருட்களுக்கு பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல வீடுகளில் எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்டமை தொடர்பாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குறித்த இளைஞனை கைது செய்துள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களில் ஒரு தொகுதியினையும் மீட்டுள்ளார்கள்.

இந்தக் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரைக் கைது செய்துள்ளதுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.