யாழில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் மர்ம பொருட்கள்: அதிர்ச்சியில் மக்கள்

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் மர்ம பொருட்கள் பல கரையொதுங்குகின்றன.

அந்த வகையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஒன்பதாம் வட்டாரம் அரசடி முருகன் கோவிலடியில் மர்ம பொருளொன்று கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மர்மபொருள் இன்று (4) காலை கரையொதுங்ககியுள்ளதுடன்  கரையொதுங்கிய குறித்த பொருளை பொதுமக்கள் அதிகளவானோர் பார்வையிட்டு வருவதுடன் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருளில் Asia 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கப்பலில் இருந்து தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

இப்பொருளை அகற்றுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 1ஆம்  திகதி யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடற்கரையில் இரும்பில் அமைக்கப்பட்ட பொருளொன்று கரையொதுங்கியிருந்தது.

மேலும், கடந்த டிசம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியிருந்தது.

மட்டக்களப்பில், டிசம்பர் 28 திகதி மர்மப் பொருளொன்று கரையொதுங்கியது.

அப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.