இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டி ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணை ஆணையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலியப் படைகள் காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் போரில் இஸ்ரேல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கை இஸ்ரேல் செய்ததாக ஆணையம் தனது 72 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு இனக்குழுவினரை குறிவைத்து கொல்வது,அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, அந்த இனக்குழுவினருக்கு வேண்டுமென்றே அழிவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும்.
இஸ்ரேலிய தலைவர்களின் கருத்துகளும், இராணுவத்தின் செயல்களும், அவர்களின் இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றுகள் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐ.நாவில் வெளியான இந்த குற்றசாட்டை இஸ்ரேல் மறுத்துள்ளது.