நாட்டில் வேகமாக பரவி வரும் நோய் ! 65 அபாய பகுதிகள் அடையாளம், இருவர் மரணம்..!


நாட்டின் சில பகுதிகளில் எலிக்காய்ச்சல் அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி மினுவாங்கொடை சுகாதார வைத்திய பிரிவிலுள்ள 15 கிராமங்களில் எலிக்காய்ச்சல் அபாயம் இருக்கின்ற 65 இடங்களை தெரிவு செய்வதற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாதேல்கமுவ, நெதகமுவ, பத்தடுவன, நில்பனகொட, ஹொரம்பெல, உடுகம்பொல, மெதகம்பிட்டிய தெவொல பொல, வோகொச்சிய, மாரபொல, யட்டியான, கொரச, வீதியவத்த, அஸ்கிரிய, கல்ஒலுவ ஆகிய பிரதேசங்கள் அதிக ஆபத்துள்ள கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் இந்த அதிக ஆபத்துள்ள பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 17 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சலுக்கு எதிரான பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.