கிழக்கு நோக்கிய பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 பேர் விடுதலை..! யாழ். நீதிமன்றம் உத்தரவு


இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி இடம்பெற்ற பேரணியில் பங்கேற்ற 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எழு பேரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான , சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட எழு பேரே இவ்வாறு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று (8) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தியமை, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் இந்த 7 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக வருகைதந்த அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலருக்கு எதிரான வழக்கு விசாரணையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

குறித்த இரண்டு வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

அப்போது பிரதிவாதிகள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி இரண்டு வழக்குகளையும் கிடப்பில் போட்டு 11 பேரையும் விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து இரண்டு வழக்கையும் கிடப்பில் போட்ட நீதிமன்றம் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்குகளில் பிரதிவாதிகள் சார்பில்அதிபர் சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஷ் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.