ட்ரம்ப் - புடின் சந்திப்பிற்கு பின்னர் உக்ரேனை சரமாரியாக தாக்கிய 574 ரஷ்ய ட்ரோன்கள்



ரஷ்யா இந்த ஆண்டின் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை உக்ரேன் மீது ஒரே இரவில் நடத்தியுள்ளது.

574 ட்ரோன்கள் மற்றும் 40 போலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரேன் மீது ஏவப்பட்டதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள் பெரும்பாலும் மேற்குப் பகுதிகளை குறிவைத்வை என உக்ரேன் தரப்புக்கள் விளக்கியுள்ளன.

தாக்குதல் இடம்பெற்ற பிரதேசமானது மேற்கத்திய நாடுகள் வழங்கும் இராணுவ உதவிகள் சேமித்து விநியோகிக்கப்படும் பகுதி என கூறப்படுகிறது.

 இந்த ஆண்டு ரஷ்யாவின் மூன்றாவது பெரிய ட்ரோன் தாக்குதலாகவும், எட்டாவது பெரிய ஏவுகணை தாக்குதலாகவும் இது கருதப்படுகிறது.

ட்ரோன் தொழிற்சாலைகள், கிடங்குகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் உட்பட "உக்ரேனிய இராணுவ - தொழில்துறை வளாகத்தின் நிறுவனங்களை" குறிவைத்ததாக ரஷ்யா கூறியிருந்தாலும், இதுபோன்ற பெரும்பாலான தாக்குதல்கள் பொதுமக்கள் பகுதிகளைத் தாக்கியுள்ளன.

சேதமடைந்த வசதிகளில் உக்ரேனின் ஹங்கேரி எல்லைக்கு அருகில் அமெரிக்காவிற்குச் சொந்தமான மின்னணு தொழிற்சாலையும் அடங்கும் என கூறப்படுகிறது.

மேலும், உக்ரேனில் உள்ள அமெரிக்க வர்த்தக சபையின் தலைவர் ஆண்டி ஹண்டர், நாட்டின் மிகப்பெரிய அமெரிக்க முதலீடுகளில் ஒன்றான ஃப்ளெக்ஸ் தொழிற்சாலையில்  இரவு நேரப் பணியில் 600 பணியாளர்கள் இருந்தபோது தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும், ஆறு பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரேன் இடையிலான போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பிற்கு பின்னர் உக்ரேன் மீது ஒரே இரவில் ரஷ்யா நடத்திய இந்த சரமாரியான ட்ரோன் தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.