ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் நகரில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 3.48 மணியளவில் பதிவாகியுள்ளது.

மேலும் குறித்த நிலநடுக்கம் லடாக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதோடு நிலநடுக்கத்தால் கட்டிடங்களும் அதிர்ந்துள்ளன.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்ததாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேவேளை கிஷ்த்வார் பகுதிகளில் பிற்பகல் 4.01 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதோடு 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது