உக்ரேனில் 5 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ரஷ்யா தகவல்



போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 இலட்சம் இராணுவ வீரர்களை உக்ரேன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் தொடர் எச்சரிக்கைகளை மீறி நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரேன் தொடர்ந்து முன்னெடுத்தது. இதன்காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரேன் மீது ரஷ்யா தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்த தொடங்கியது.

மிகப்பெரிய படைபலத்தை கொண்ட ரஷ்யா, ஓரிரு நாட்களில் உக்ரேனை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வாரி வழங்கி வருகின்றன. 


இதன் காரணமாக போர் தொடங்கி 2 ஆண்டுகளை கடந்த பிறகும் உக்ரேன் ராணுவம் ரஷ்யாவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

அதே சமயம் இந்த போரில் உக்ரேன் பெரும் இழப்பையும் சந்தித்து வருகிறது. உக்ரேனின் பல்வேறு நகரங்கள் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. 

அவற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் உக்ரேன் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் உக்ரேனின் முயற்சிகளை முறியடிக்க ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

மூன்றாவது  வருடமாக தொடரும் இந்த போரில் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இருநாடுகளுமே கட்டாய இராணுவ சேவை திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருகின்றன. 

இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரேனில் சுமார் 5 இலட்சம் இராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு  தெரிவிக்கையில்.

சிறப்பு ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து தற்போது வரையில் உக்ரேன் ஆயுதப்படைகள் அரை மில்லியன் இராணுவ வீரர்களை இழந்துள்ளன. 

உக்ரேன் இராணுவத்தின் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள், 1,000 ஏவுகணைகள், சுமார் 900 விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை ரஷ்யா அழித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.