சஜித் அணியிலுள்ள 50 எம்.பிக்கள் ரணில் அரசாங்கத்துடன் இணையத் தயார்! ஐ.தே.க. தவிசாளர் வெளியிட்ட தகவல்

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து 50 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைய எந்நேரமும் தயாராகவுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ரணிலின் சிறந்த ஆட்சியாலும் நாட்டு மக்கள் மீதான அக்கறையாலுமே அவர்கள் அரசாங்கத்துடன் இணையத் தயாராகியுள்ளனர்.

அரசாங்கத்துடன் இணையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எம்முடன் பேச்சு நடத்தியுள்ளனர். அவர்கள் எப்போது அரசாங்கத்துடன் இணைவார்கள் என்று தெரியாது.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களாவர்.

எனவே, தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் குறித்த உறுப்பினர்களை வலைவீசி எடுக்கும் தேவை ரணிலுக்குக் கிடையாது.அவர்கள் தாமாகவே ரணிலுடன் இணைவார்கள். எனினும், தற்போதைய நிலைமையில் கட்சி அரசியலை நான் பேச விரும்பவில்லை. அதற்கான நேரம் இதுவல்ல.

மக்கள் நலன் என்ற ரீதியில் அரசாங்கத்துடன் நாம் அனைவரும் ஓரணியில் செயற்பட வேண்டும். அப்போதுதான் நாடு மீளெழுச்சி பெறும் என சுட்டிக்காட்டுயுள்ளார்.