கிருஷாந்தியை சீரழித்த இராணுவ கோப்ரல் உள்ளிட்ட 5 குற்றவாளிகள் : தண்டனையை குறைக்குமாறு கோரிக்கை


உலகையே உலுக்கிய, 1996ஆம் ஆண்டு பதிவான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிருஷாந்தி குமாரசுவாமி எனும் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், தமது தண்டனை குறைப்பு தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க, உயர்நீதிமன்றம் நேற்று (3) தீர்மானித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உள்ளிட்ட 5 குற்றவாளிகள், தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை அமுல் செய்யப்படாமை காரணமாக, தமக்கு மன்னிப்பளித்து, தமது தண்டனை காலத்தை 20 வருட சிறைத் தண்டனைக் காலமாக மாற்றுவது குறித்து ஜனாதிபதி ஆராய வேண்டும் என தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனுவை அடிப்படை உரிமை மீறல் மனுவாக தாக்கல் செய்திருத்தனர்.

இதன்போது மனுதாரர்களுக்காக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமது சேவை பெறு நர்கள் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்துவரும் நிலையில் அது கொடூரமானது என்றும் அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் அதனால் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் கூறினார்.

அரசியலமைப்பின் படி, நீதிமன்றங்களால் தண்டிக்கப் பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குவது ஜனாதிபதியின் தத்துணிவு அதிகாரம் என சுட்டிக்காட்டிய பிரதி சொலி சிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க. அத்தகைய மன்னிப்பை கோர மனுதாரருக்கு எந்தவிதமான சட்ட ரீதி யிலான உரிமைகளும் இல்லை எனக் இதன்போது  குறிப்பிட்டார்.

மனுதாரர்கள் உண்மைகளை மறைத்து மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர்கள் உண்மையான சான்றுகளுடன் நீதிமன்றுக்கு வரவில்லை எனவும் பிரதி சொலி சிட்டர் ஜெனரல் லக்மாலி சுருணாநாயக்க மற்றொரு அடிப்படை ஆட்சேபனையை முன் வைத்தார்.
இந்த நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் இம்மனுவை விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்தது.

கடந்த 1998 ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகளைக் கொண்ட கொழும்பு உயர் நீதிமன்ற அமர்வு மூலம் குற்றவாளிகள் என தாம் திரூபிக்கப்பட்டு அந்த நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக் கப்பட்டதாக மனுதாரர்கள் இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அரசாங்கம் எடுத்த கொள்கை ரீதியிலான முடிவு காரணமாக மரண தண்டனையை நிறைவேற்றுவதில்லை என அரசு தீர்மானித்துள்ளதாக மனுதாரர்கள் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக மனுதார்களாகிய தாம் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 20 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றவும், தண்டனை விதிக்கப்பட்ட 1998 ஆம் ஆண்டு முதல் தண்டனை காலத்தை அமுல்படுத்த உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.