இஸ்ரேல் உளவு பிரிவினர் என கூறி 4 பேருக்கு தூக்கு தண்டனை : ஈரான் அதிரடி

இஸ்ரேலுக்கு உளவு பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேருக்கு ஈரானில் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

 ஈரானிய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் பலரை இஸ்ரேல் படுகொலை செய்து வருகிறது என ஈரான் கூறுகிறது.

ஈரான் நாட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தேவையான சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று இஸ்பாஹன் பகுதியில் செயல்பட்டு வருகிறது.  

இந்த நிலையில், ஈராக் நாட்டின் குர்திஸ்தான் பகுதியில் இருந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் ஈரான் எல்லைக்குள் சட்டவிரோத வகையில் நுழைந்து விட்டனர் என கூறி 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில், அவர்கள் 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.  எனினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.  அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  

இதனை தொடர்ந்து அவர்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் நீண்ட நாட்களாக எதிரிகளாக உள்ளன.  இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஈரான் ஆதரவளித்து வருகிறது என இஸ்ரேல் குற்றச்சாட்டு கூறி வருகிறது.

எனினும், ஈரானிய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் பலரை இஸ்ரேல் படுகொலை செய்து வருகிறது என ஈரான் கூறுகிறது.  இதனை இஸ்ரேல் உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ இல்லை.